காவிரி.. உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகௌடா
பெங்களூரு : காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவைக் கண்டித்து இன்று காலை உண்ணாவிரதத்தை தொடங்கிய முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவருமான ஹெச்.டி.தேவகௌடா, தற்போது தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
காவிரி தொடர்பான தமிழக அரசின் இடைக்கால மனுவை, கடந்த 20ம் தேதி,விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்துக்கு 21 முதல் 27ம் தேதி வரை 6 ஆயிரம் கன அடி காவிரி நீரை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் 30ம் தேதி வரை தமிழகத்துக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிடுமாறு கடந்த 27ம் தேதி உத்தரவிட்டது. இதை கர்நாடகா ஏற்கவில்லை. சட்டசபையை கூட்டி, தண்ணீர் விடமாட்டோம் என தீர்மானத்தை நிறைவேற்றியது.
இந்நிலையில் தமிழகம்-கர்நாடகா இடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாரத்தை தோல்வியில் முடிந்தது. இதை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து தமிழகத்துக்கு அக்டோபர் 6ம் தேதி வரை, 6000 கன அடி நீர் திறக்க வேண்டும், என உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத கர்நாடக அரசுக்கு இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. வரும் செவ்வாய்க்கிழமைக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக நேற்று பிரதமர் மோடி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கெடு வழங்கியதையடுத்து இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காவிரி நதிநீர் விவகாரம் குறித்து இன்று கர்நாடகாவில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக கர்நாடகாவில் மேலும் பதற்றம் உருவாகிது. கடந்த 25 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது.
இதனிடையே காவிரி விவகாரத்தை கையில் எடுத்துள்ள முன்னாள் பிரதமர் ஹெச். டி. தேவகௌடா. உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்த ஆரம்பித்தார்.தலைமை செயலகமான விதானசவுதா எதிரேயுள்ள காந்திசிலையின் கீழ் இன்று உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்தார் தேவகெளடா. இதனால் பெங்களூருவில் பரபரப்பான சூழல் நிலவியது.
விதான சவுதாவில் உண்ணாவிரதம் இருந்து வந்த தேவேகவுடாவை பிரதமர் நரேந்திரமோடி சார்பில் மத்திய அமைச்சர்கள் அனந்தகுமார், சதானந்தகவுடா ஆகியோர் இரவு சந்தித்து பேசினர். அப்போது உடல் நலன் கருதி உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு அவர்கள் கூறினர். காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனை காக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து தேவேகவுடா உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.