12ம் தேதி கூடுகிறது காவிரி கண்காணிப்புக் குழு... கூடுதல் நீர் கிடைக்குமா? #TNNeedsKaveri
டெல்லி: டெல்லியில் செப்டம்பர் 12ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட நான்கு மாநிலங்களின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
காவிரியிலிருந்து இந்த மாதம், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு 10 நாட்களுக்குள் சுமார் 13 டிஎம்சி என கணக்கிட்டு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
அதேநேரம், தமிழகத்திற்கு, கூடுதல் தண்ணீர் தேவை என்றால் காவிரி கண்காணிப்பு குழுவை 3 நாட்களுக்குள் நாடவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து தமிழக அரசு இ-மெயில் வாயிலாக காவிரி கண்காணிப்பு குழுவிடம் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளளது.
அந்த மனுவில், செப்டம்பர் 30ம் தேதிக்குள் 134 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்ற உத்தரவுபடி சுமார் 13 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது. மேட்டூர் அணையில் தற்போது இருப்பில் உள்ள நீரும், கர்நாடகம் திறந்துவிட்டுள்ள நீரும் சம்பா சாகுபடிக்கு போதுமானதாக இருக்காது. சுமார் 15 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு 60 டிஎம்சி தண்ணீர் உடனடியாக தேவை. எனவே உடனடியாக காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தை கூட்டி விவசாயத்திற்கு தேவையான 60 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து வருகிற 12ம் தேதித கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான சசி சேகர் தலைமையில் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக, புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை காவிரி கண்காணிப்புக் குழு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். அது வருகிற 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு வரும்போது உச்சநீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு அதற்கேற்ப உச்சநீதிமன்றம் கூடுதல் நீர் திறப்பு குறித்து உத்தரவிடும் என்று தெரிகிறது.