தமிழகம் தொடர்ந்த வழக்கை சந்திக்க தயார்: சித்தராமையா
பெங்களூர்: காவிரியில் கழிவு நீர் கலக்கப்படுவதாக கர்நாடகாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை சந்திக்க தயார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
காவிரி நதியில், சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கலப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கர்நாடகா மீது தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கர்நாடக மாநில பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில், ஏராளமான அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் அப்படியே கலக்கப்படுகிறது.
இதனால், தமிழக பகுதிக்கு வரும் காவிரி ஆற்று நீர் மாசடைந்து உள்ளது. தமிழக மக்கள் மாசடைந்த காவிரி ஆற்று நீரை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, காவிரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு "தமிழகம் கோர்ட்டை நாடினால், கர்நாடகாவும், நீதிமன்றம் வழியாகவே பதிலளிக்கும். வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்றார்.
கர்நாடக அரசு பழிவாங்குவதற்காக சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளதாக அதிமுக தரப்பு புகார் கூறியுள்ளதாக நிருபர்கள் கேட்டதற்கு, பத்திரிகை செய்திகளில் அதுபற்றி பார்த்தேன். எனவே அதுபற்றி பதிலளிக்க விரும்பவில்லை என்று சித்தராமையா கூறினார்.