பந்த் நடக்கும்போது சவாரியா.. பெங்களூரில் கால் டாக்சி டிரைவருக்கு சரமாரி அடி #TNNeedsKaveri
பெங்களூர்: பந்த் நேரத்தில் கார் ஓட்டிச் சென்றதற்காக, கால் டாக்சி டிரைவரை கன்னட சங்கத்தினர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது.
பெங்களூரில் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை என்றபோதிலும், ஊபேர், ஓலா நிறுவனங்கள் தங்கள் டாக்சிகளை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தன. அதன்படி இன்று காலை அவ்விரு நிறுவன கால் டாக்சி சேவை வழக்கம்போல நடைபெற்றது.
பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியிலுள்ள சிட்டி ரயில் நிலையத்திற்கு வந்த ஒரு பயணி ஓலா டாக்சியை புக் செய்திருந்தார். இதையடுத்து டிரைவர் அவரை பிக்-அப் செய்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது, அங்கே காவிரி ஆட்டோ சங்கத்தினர் நின்றபடி, டாக்சியை மறிக்க முற்பட்டனர். ஆனால் டாக்சி டிரைவர் வாகனத்தை வேகமாக செலுத்தி சென்றார். இதனால் டாக்சியை பிடிக்க முற்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் கீழே விழுந்தார். இதை பார்த்த சக போராட்டக்காரர்கள் காரை வழிமறித்து நிறுத்தினர்.
விண்டோ வழியாக டிரைவரை சரமாரியாக குத்தினர். அவரது முகத்தில் அறைந்தனர். வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அப்போது ஓடிவந்த டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், கைகலப்பில் ஈடுபட்டவர்களை பிடித்து தள்ளிவிட்டு டாக்சியை அங்கிருந்து பத்திரமாக அனுப்பினார்.
இதனிடையே, தமிழ்நாடு பதிவெண் கொண்ட தனியார் பஸ் ஒன்றை மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலேயே தடுத்து நிறுத்திய பெங்களூர் போலீசார் அதை தங்கள் பாதுகாப்பின்கீழ் கொண்டுவந்தனர். அசம்பாவிதத்தை தவிர்க்க, மாலை 6 மணிக்கு மேல்தான் பஸ்சை அனுப்ப முடியும் என போலீசார் கூறிவிட்டனர்.