காவிரி.. கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை ஆய்வு செய்தது உயர்மட்ட குழு #cauvery
பெங்களூர்: காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழ்நாடு, கர்நாடகா அணைகளில் உள்ள நீர் இருப்பை நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டது.
அதன் பேரில் மத்திய நீர் வளத்துறை செயலாளர் ஜா தலைமையில் நிபுணர்கள் கொண்ட தொழில் நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
இன்று காலை ஜி.எஸ்.ஜா தலைமையிலான காவிரி உயர் தொழில் நுட்பக் குழுவில் உள்ள நிபுணர்கள் பெங்களூரில் சந்தித்து ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப்பணி துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், புதுச்சேரி சார்பாக தலைமை பொறியாளர் சுவாமிநாதன், கர்நாடக பொதுப்பணி துறை இயக்குனர் சிக்கராயப்பா, கர்நாடக முதன்மை பொறியாளர் சிவ சங்கர், கர்நாடக தலைமை நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங் கலந்துகொண்டனர்.
சுமார் 1 மணி நேரம் இந்த ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங் களுக்கு தற்போது தேவைப் படும் காவிரி நீர் அளவு பற்றி விவாதிக்கப் பட்டது. தமிழ்நாடு, கர்நாடக மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் புள்ளி விவரங்களுடன் தங்கள் தண்ணீர் தேவை குறித்து கூறினார்கள். வீடியோக்கள், ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
இதைத்தொடர்ந்து நிபுணர் குழுவினர் கர்நாடகா அணைகளில் முதலில் ஆய்வு செய்ய முடிவு செய்தனர். தொழில்நுட்ப குழுவினர் இன்று கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் மத்தூர் தாலுகா மற்றும் மலவள்ளி தாலுகாவில் உள்ள நீர் நிலைகள், குளங்கள் மற்றும் ஆறுகளை பார்வையிட்டனர். அதன் பின் கே.ஆர்.எஸ் பகுதியில் தங்கி நாளை கே.ஆர்.எஸ் அனையை பார்வையிட உள்ளனர்.
கர்நாடகா அணைகள் ஆய்வுப்பணி முடிந்ததும் நிபுணர்கள் மேட்டூருக்கு வந்து தண்ணீர் இருப்பை ஆய்வு செய்வார்கள்.மேலும் டெல்டா பாசனப் பகுதிகளில் உள்ள உண்மையான கள நிலவரத்தையும் கேட்டு அறிவார்கள்.
இந்த ஆய்வுகள் முடிந்ததும் நிபுணர்கள் குழு டெல்லி திரும்பும். பிறகு ஆய்வுகள் அடிப்படையில் ஜா தலைமையிலான உயர் தொழில் நுட்பக் குழு ஒரு அறிக்கையை தயார் செய்யும். அந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் 17ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் 18-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெறும்.