காவிரி போராட்டம்: மைசூரில் ரஜியின் கபாலி போஸ்டர் கிழிப்பு #cauvery
மைசூர்: காவிரி விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மைசூரில் கபாலி ரஜினி போஸ்டரை கிழித்துள்ளனர்.
கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட்டது தொடர்பாக கோபத்தில் இருந்த கன்னட அமைப்புகள் இன்று பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டுள்ளன.
மைசூர் ரோட்டில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டதுடன், தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மேலும் பெங்களூரில் தமிழர்களின் கடைகள் தாக்கப்பட்டுள்ளன.
பெங்களூர்
பெங்களூரில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களில் யாரும் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரில் பதட்டம் நிலவுவதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அலுவலகங்கள்
பெங்களூரில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பத்திரமாக வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளன. பதட்டத்துடன் பலர் வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருப்பதால் நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது.
மைசூர்
மைசூரிலும் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. இந்நிலையில் மைசூர் ராமசாமி சர்கிளில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் முத்தூட் பின்கார்ப் நிறுவனம் கபாலி ரஜினி புகைப்படம் அடங்கிய போஸ்டரை வைத்துள்ளது. போராட்டக்காரர்கள் அந்த போஸ்டரை கட்டையால் தாக்கி கிழித்தனர்.
பதட்டம்
ரஜினியை கொண்டாடிய கன்னட அமைப்பினரே தற்போது அவரது போஸ்டரை கிழித்துள்ளனர். பெங்களூரில் உள்ள சில நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பாமல் அலுவங்களுக்குள் வைத்து பூட்டி வைத்துள்ளன.