மைசூர் ராஜா நகையை அடமானம் வைத்தாரா.. கே.ஆர்.எஸ். அணை கட்டினாரா.. எஸ்.எம்.கிருஷ்ணா சொல்வதை பாருங்கள்
பெங்களூர்: கே.ஆர்.எஸ். அணைக்கட்டை உருவாக்க மைசூர் ராஜா மிகவும் கஷ்டப்பட்டார் எனவே அதை காவிரி மேலாண்மை வாரியம் எளிதில் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறினார் கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா (காங்.).
இதுகுறித்து நேற்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கும் முன்பாக நிருபர்களிடம் பேசிய கிருஷ்ணா, நீதிபதிகள் கர்நாடக வரலாறு தெரியாமல் தீர்ப்பளித்துள்ளனர். இது அமல்படுத்த முடியாத தீர்ப்பு. மைசூர் ராஜா, தங்க நகைகளை அடமானம் வைத்து கட்டிய அணை கர்நாடகாவுக்குத்தான் சொந்தம். வேறு ஒருவர் சொத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் முன்பாக நோட்டீஸ் அனுப்பி, உரிய இழப்பீடு கொடுத்து அதன்பிறகே கையகப்படுத்தும். ஆனால், உச்சநீதிமன்றமோ 4 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, அதன் கையில் கர்நாடகாவின் முக்கிய அணைக்கட்டுகளை ஒப்படைக்க கூறுகிறது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மற்றொரு பெஞ்ச் முன்னிலையில் கர்நாடகா வழக்கு தாக்கல் செய்யலாம், அரசியல் சாசன பெஞ்சை கூட அணுகலாம். காவிரி மேற்பார்வை குழுவில் நீர்ப்பாசன நிபுணர்கள் இருப்பார்கள், அனைத்து மாநில பிரதிநிதிகளும் இருப்பார்கள். எனவே அவர்கள் கூறிய உத்தரவுதான் சரியாக இருக்கும். இப்போது கூட மேற்பார்வை குழு சரியாக கூறியிருந்தது (3 ஆயிரம் கன அடி மட்டும் விடுவிக்க கூறியிருந்தது). ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இதுகுறித்த விவரம் போதாது என்பதுதான் பிரச்சினைக்கு காரணம். காவிரி மேற்பார்வை குழுவிடம் செல்லுமாறு இரு மாநிலங்களையும் உச்சநீதிமன்றம் கூறியிருக்க வேண்டும். இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.