தமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது.. மண்டியாவில் காலி குடங்களுடன் தமிழ் பெண்கள் போராட்டம்!
மைசூர்: மண்டியா வாழ், தமிழக மக்கள் இன்று காவிரி தண்ணீரை திறந்துவிடக்கூடாது என கூறி, காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவிலேயே குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் தமிழகத்திற்க்கு கே.ஆர்.எஸ் அணையில் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து காலி குடங்களுடன் மைசூர்-மண்டியா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா காவிரி விவகாரத்தால் எப்போதுமே கொந்தளிப்புடன் இருக்க கூடியது. இந்த மாவட்டத்தில்தான் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
'சர்க்கரை நாடு' என கன்னட மக்களால் செல்லமாக அழைக்கப்படும் பகுதி மண்டியா மாவட்டம். ஏனெனில், இங்கு தடுக்கி விழுந்தால் ஒரு கரும்பு தோட்டம் இருக்கும்.
கூலிவேலை
இந்த கருப்பு தோட்டத்தில் கூலி வேலை செய்வதற்காக தமிழகத்தின் கொங்கு மண்டலம், வட மாவட்டங்களில் இருந்து ஏராளமான தமிழர்கள் குடும்பத்தோடு மண்டியா மாவட்டத்தில் தங்கியுள்ளனர்.
தமிழ் காலனி
மண்டியாவில், தமிழர்கள் காலனி என்றே ஒரு பகுதியுள்ளது. இங்கு பெரும்பாலும் தலித் மக்கள் வசிக்கிறார்கள். முன்பு ஒரு கலவரத்தில் இவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எனவே இம்முறை அப்பகுதியி்ல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலிக்குடங்களுடன் போராட்டம்
இந்நிலையில், மண்டியா வாழ் தமிழக மக்கள் இன்று காவிரி தண்ணீரை திறந்துவிடக்கூடாது என கூறி, காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர். கர்நாடகாவிலேயே குடிநீர் பற்றாக்குறை உள்ள நிலையில் தமிழகத்திற்க்கு கே.ஆர்.எஸ் அணையில் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து காலி குடங்களுடன் மைசூர்-மண்டியா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் அமைப்புகளும்
பெண்களும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேபோல சிக்மகளூர் பகுதியிலுள்ள தமிழ் சங்கத்தினரும், கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, தமிழக அரசின் விடாப்பிடி நடவடிக்கையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
சுயமான முடிவுகள்
கர்நாடகாவிலுள்ள கன்னட அமைப்புகள் நிர்பந்தம் இன்றியே, சுயமாகவே காவிரி பிரச்சினைகளின்போது அங்குள்ள தமிழ் அமைப்புகள் கர்நாடக அரசின் நிலைப்பாட்டுக்கே ஆதரவு தெரிவிக்கின்றன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, கர்நாடகாவில் வசிக்கும் தமிழக மக்களின் குடிநீர் தேவை போன்றவையும் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம்.