காவிரி நடுவர் மன்ற பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்த மத்திய அரசு
டெல்லி: காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக் காலம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களிடையே காவிரி நதிநீரை பங்கிடுவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, 1990ம் ஆண்டு, ஜூன், 2ம் தேதி, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 1991ம் ஆண்டு தனது இடைக்கால தீர்ப்பை நடுவர்மன்றம் வழங்கியது.
நீண்ட விசாரணைகளுக்குப் பின், 2007ம் ஆண்டு பிப்ரவரி 5ல் நடுவர் மன்றம் அதன் இறுதி தீர்ப்பை வழங்கியது. காவிரியில் ஆண்டுதோறும், ஜூன் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், தமிழகத்துக்கு, 192 டி.எம்.சி, தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்பதே அந்த தீர்ப்பு.
இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், காவிரி நடுவர் மன்ற பதவிக்காலம் கடந்த வியாழக்கிழமமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, காவிரி நடுவர் மன்றத்தின் பதவிக்காலம் 2018, மே, 2ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.