காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை.. தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணா விரத போராட்டம்
Recommended Video
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வெளியானது.
இந்த தீர்ப்பில் கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கான தண்ணீர் 177.25 டிஎம்சி என்ற அளவாக, குறைக்கப்பட்டு இருந்தாலும், உரிய காலத்தில் தண்ணீரை முறையாக திறந்துவிடுவதற்கு வசதியாக காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களில் அமைக்க உத்தரவிடப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கொடுத்த காலக் கெடு 29ம் தேதியுடன், முடிய உள்ள நிலையில், மத்திய அரசு இதுவரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.
இதையடுத்து, பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக விவசாயிகள் 100 பேர் டெல்லி சென்றுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு தமிழக விவசாயிகள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.