வெளிநாடு தப்பிய மோசடி மன்னன் நீரவ் மோடியை பிடிக்க சிபிஐ அதிரடி.. இன்டர்போலும் களத்தில் குதித்தது
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,300 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு குடும்பத்தோடு வெளிநாடு தப்பியுள்ளார் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி.
இந்த மோசடி கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் அதாவது 2011 முதலே துவங்கிவிட்டதாக பாஜக தரப்பும், பாஜக தலைமையிலான அரசு மத்தியில் உள்ள தற்போதைய காலகட்டத்தில்தான் அவர் தப்பியோடிவிட்டதாக காங்கிரசும் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த விவகாரத்தில் நெருக்கடியை சந்தித்து வரும் மத்திய அரசு, நீரவ் மோடியை எப்படியாவது இந்தியா கொண்டுவர வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
இதையடுத்து, சிபிஐ மூலம், லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. வெளியுறவுத்துறை, நீரவ் மோடி அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் பாஸ்போர்ட்டை முடக்கியுள்ளது. நீரவ் மோடியின் தொழில் பார்ட்னரும் அவரது உறவினருமான மேகுல் சோக்சி பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுள்ளது.
சர்வதேச விசாரணை அமைப்பான இன்டர்போல் உதவியை சிபிஐ நாடியுள்ள நிலையில், இன்டர்போலும், நீரவ் மோடியை தேடும் பணியை தொடங்கியுள்ளது. இதுகுறித்து இன்டர்போல் தனது வெப்சைட்டில் தகவல் வெளியிட்டுள்ளது.