விறுவிறுப்பாகும் குட்கா வழக்கு... குடோன் அதிபர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 7 பேர் கைது
Recommended Video
சென்னை: குட்கா ஊழல் வழக்கில் உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் மற்றும் எம்.கே. பாண்டியன், குடோன் அதிபர்கள் மாதவராவ், உமாசங்கர் குப்தா உள்பட 7 பேரை சிபிஐ கைது செய்தது.
கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்க ஜெயலலிதா அரசு தடை விதித்தது. இதனிடையே மதுரவாயலில் ஒரு குடோனில் கடந்த 2016-ஆம் ஆண்டு வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் அங்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் குட்காவை மீண்டும் விற்பனை செய்ய அமைச்சர்கள், மூத்த காவல் துறை அதிகாரிகள், முக்கிய புள்ளிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குட்கா வியாபாரி மாதவராவ் எழுதியிருந்தார்.
சிபிஐ விசாரிக்க
இந்த ஊழல் குறித்து வருமான வரித் துறை ஜெயலலிதா அரசுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உயர்நீதிமன்றம் தலையிட்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.
உத்தரவு
இதையடுத்து இந்த ஊழல் தொடர்பாக தலைமை செயலாளருக்கு வருமான வரித் துறையினர் கடிதம் 2016-ஆம் ஆண்டு எழுதியிருந்தது. எனினும் அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் உயர்நீதிமன்றம் உத்தரவை அடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
சோதனை
பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதவராவை சிபிஐ அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரித்தனர். அப்போது அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் நேற்றைய தினம் 5 மாநிலங்களில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
3 பேர் கைது
காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோர் வீடுகளில் 8 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து குட்கா ஊழல் தொடர்பாக இடைத்தரகர்களான நந்தக்குமார், ராஜேந்திரன் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
அதிபர் கைது
இதையடுத்து இந்த வழக்கு மேலும் சூடு பிடித்துள்ள நிலையில் குட்கா குடோன் அதிபர்கள் மாதவ ராவ் , உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில் முருகன் மற்றும் எம்.கே. பாண்டியன் உள்ளிட்ட 4 பேரும் தற்போது கைது செய்யப்பட்டனர். புரோக்கர்களை மட்டும் கைது செய்த நிலையில் தற்போது அதிகாரிகளையும் சிபிஐ கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.