தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி: டெல்லி கோர்ட்டில் அன்புமணி ஆஜர்
டெல்லி: தனியார் மருத்துவக் கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி அளித்த வழக்கில் தர்மபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ் டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பாமக இளைஞரணி தலைவரும், தர்மபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக அனுமதி அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சிபிஐ அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையை சிபிஐ கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி தாக்கல் செய்தது.
இந்தூரில் உள்ள இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரியில் 2008-2009ம் கல்வி ஆண்டில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டது. அப்போது மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் விதிகளை மீறி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்ததால் தான் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு டெல்லியில் உள்ள பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அன்புமணிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அவர் இன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரானார்.