நேற்றும் தூக்கம்.. இன்றும் உறக்கம்... போலீஸ் மாநாட்டில் தொடர்ந்து 2வது நாளாக தூங்கிய சிபிஐ இயக்குநர்
கவுகாத்தி: அசாமில் நடைபெற்று வரும் உள்துறை மாநாட்டில் பங்கேற்ற சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா, நேற்று தூங்கியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இன்றும் பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த போது தூங்கிக் கொண்டிருந்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்துறை மாநாடு நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய காவல்துறை அதிகாரிகள், உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த இம்மாநாட்டில் பங்கேற்ற சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசிக் கொண்டிருந்த போது, விழிகளை மூடி உறக்கத்தில் இருந்தது ஊடகங்கள் மூலம் அம்பலமானது.
இந்நிலையில், இன்று இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, காவலர்களின் பெருமை, அவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் குறித்தும் பேசிக் கொண்டிருந்த போது, நேற்றைப் போலவே இன்றும் சின்கா உறக்கத்தில் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.