நிலக்கரி சுரங்க வழக்கு: மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப கோரிய மதுகோடா மனு தள்ளுபடி: சி.பி.ஐ கோர்ட்
டெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப கோரிய ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் மனுவை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் 214 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டது என்பது மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் புகார்.
இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதும் புகார் எழுந்தது. அவரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீது எந்த தவறும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதேபோல் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதும் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஜரான மதுகோடா, தங்களது பெயரை இணைத்த சி.பி.ஐ., சம்பந்தப்பட்ட ஊழல் நடைபெற்ற காலத்தில், பிரதமராகவும், நிலக்கரித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த மன்மோகன்சிங் பெயரையும் கிரிமினல் குற்றவாளியாக இணைத்து விசாரிக்க வேண்டும் எனக்கோரி மனுத்தாக்கல் செய்தார்.
இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மனுவை விசாரித்த சி.பி.ஐ. நீதிமன்றம் இன்று, இந்த வழக்கில் மன்மோகன்சிங்குக்கு சம்மன் அனுப்ப தேவையில்லை எனக் கூறி மதுகோடாவின் மனுவை தள்ளுபடி செய்தது.