சோட்டா ராஜனை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி மறுப்பு
டெல்லி: சிபிஐ காவலில் உள்ள சோட்டா ராஜனை சந்திக்க அவரது குடும்பத்தினர் மனு அளித்தனர். ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த சோட்டா ராஜன் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக இன்டர்போலிடம் சிக்காமல் தண்ணி காட்டி வந்தான். இந்நிலையில் போலி பாஸ்போர்ட் மூலம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் சென்ற போது போலீசாரால் அங்கு கைது செய்யப்பட்டான்.
சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்ட சோட்டா ராஜனை தங்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். அதனையடுத்து சோட்டா ராஜனை 10 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சோட்டா ராஜனுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அவனை நேரில் சந்திக்க அனுமதி கோரியும் அவனது குடும்பத்தினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்படுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிபிஐ தரப்பில் கூறும்போது, கடந்த 27 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சோட்டா ராஜன் மிகுந்த சிரமத்துக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடம் பல்வேறு முக்கிய குற்ற வழக்குகள் தொடர்பாக சிபிஐ விசாணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அவனை வெளி ஆட்கள் சந்திப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு அனுமதித்தால் அவனது உயிருக்குக் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் தான் அவனை மும்பைக்கு கொண்டு செல்லாமல் டெல்லியிலேயே வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.
சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றாலும் கூட, பாதுகாப்புக் காரணங்களுக்காக அவனை தினமும் வெவேறு இடங்களில் வைத்து விசாரித்து வருகிறோம்.இந்நிலையில் அவனுக்கு உணவு கூட வெளியில் இருந்து வழங்குவதை அனுமதிக்க முடியாது என்றார்.