நான் பேசியது தவறாக இருந்தால் மன்னியுங்கள்.. 'ரேப்' பற்றிப் பேசிய சிபிஐ இயக்குநர் வருத்தம்
டெல்லி: பாலியல் பலாத்காரம் குறித்து நான் பேசிய பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தவிர்க்க முடியாத வார்த்தையாக அது வந்து விட்டது. நான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று கூறியுள்ளார் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா.
பாலியல் பலாத்காரத்தைத் தடுக்க முடியாவிட்டால் அதை அனுபவியுங்கள் என்று பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார் ரஞ்சித் சின்ஹா. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. சின்ஹா பதவி விலக வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த நிலையில் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் சின்ஹா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் தவிர்க்க முடியாத வையில், உள்நோக்கமின்றி பேசிய பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மீது நான் மிகுந்த மரியாதையும், மதிப்பும் வைத்துள்ளேன் என்பது உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலியல் பிரச்சினைகளில் அக்கறை காட்டுகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சின்ஹா.
முன்னதாக சின்ஹாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்தருந்த சிபிஎம் தலைவர் பிருந்தா காரத், மிகப் பெரிய பொறுப்பில், அதுவும், பாலியல் வழக்குகள் பலவற்றை விசாரித்துக் கொண்டிருக்கும் ஒரு உயரிய அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது என்று கூறியிருந்தார்.
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினும் சின்ஹாவின் கருத்தைக் கண்டித்திருந்தார். அவரது பேச்சு நம்ப முடியாத அதிர்ச்சியைத் தருகிறது என்று தஸ்லிமா தெரிவித்திருந்தார்.