நான் ஒழுங்கா வேலை பார்க்கலை.. நினைச்சதை எழுதுங்க...: ஓய்வுக்கு முதல் நாள் கொந்தளித்த 'சிபிஐ' சின்ஹா
டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ரஞ்சித் சின்ஹா தனது பணிக்காலம் குறித்து செய்தியாளர்களிடம் 'வெறுப்பின்' உச்சத்தில் வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.
சிபிஐ இயக்குநர் பொறுப்பு வகித்த கடந்த 2 ஆண்டு காலம் முழுவதும் சர்ச்சை..சர்ச்சை.. என்பதாகத்தான் ரஞ்சித் சின்ஹா பெயர் அடிபட்டது. இதில் உச்சமாக ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் குற்றவாளிகளை சந்தித்தார் என்ற காரணத்துக்காக அந்த வழக்கின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்றத்தால் ஒதுக்கியும் வைக்கப்பட்டவரும் கூட..
சில நாட்களுக்கு முன்பு அஸ்ஸாமின் குவஹாத்தியில் நடைபெற்ற காவல்துறை தலைவர்கள் மாநாட்டில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நாட்டின் பாதுகாப்பு பற்றி உரையாற்றும் போது குறட்டை விட்டு தூங்கி ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்தான் ரஞ்சித் சின்ஹா.
அவர் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் நேற்று செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர். அப்போது, சிபிஐயில் தாங்கள் பணியாற்றிய காலம் குறித்து என்ன கருதுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, நான் ஒன்னும் சொல்வதாக இல்லை.. நான் ஒழுங்கா வேலை பார்க்கவில்லை. உங்களுக்கு என்ன தோணுதோ அதை எழுதிக்கொள்ளுங்க.. என் மீது எவ்வளவு சேற்றை வாரி இறைக்க முடியுமோ அவ்வளவு வாரி இறைத்துவிட்டீர்கள்" என்று வெறுப்பின் உச்சத்தில் வார்த்தைகளைக் கொட்டியினார்.