ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தகத்துக்கு அனுமதித்தது ஏன்? மாஜி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
2004-2007ம் ஆண்டு காலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது வெளிநாட்டு வாழ் இந்தியத் தொழிலதிபரான சிவசங்கரன், சென்னையில் நடத்தி வந்த ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு 2006ம் ஆண்டில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதற்கு தயாநிதி மாறன் உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஏர்செல் நிறுவனப் பங்குகள் திடீரென மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் அனந்த கிருஷ்ணனுக்கு சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறின.
பங்குகள் கைமாறியவுடன் ஏர்செல் நிறுவனத்துக்கு 14 ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களை தயாநிதி மாறன் வழங்கினார். இதற்குப் பிரதிபலனாக மேக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவி குழுமத்தின் "சன் டைரக்ட்' நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்தது, இந்த பணம் மொரீசியஸ் உள்ளிட்ட வெளிநாடுகள் வழியே சன் டைரக்ட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐயிடம் சிவசங்கரன் கொடுத்த வாக்குமூலத்தில், என்னை மிரட்டி ஏர்செல் பங்குகளை அனந்த கிருஷ்ணனுக்கு விற்க வைத்தார் தயாநிதி மாறன் என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக 72 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, 151 சாட்சியங்கள், 655 ஆதார கோப்புகள் ஆகியவை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று மாறன் சகோதரர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த பண பரிவர்த்தனை குறித்து விசாரிக்கும் அமலாக்கத்துறை, மாறன் சகோதரர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது.
இந்நிலையில் சிபிஐ சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நிதி அமைச்சருக்கு அதிகபட்சம், ரூ.600 கோடி மதிப்புள்ள வர்த்தகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளது. ஆனால் ஏர்செல்-மேக்சிஸ் பரிமாற்றம் அதைவிட அதிக மதிப்பு கொண்டது. எனவே இதில் முடிவெடுக்கும் அதிகாரம், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கமிட்டிக்குதான் உள்ளது. இருப்பினும் சிதம்பரம் ஏன் இந்த வர்த்தகத்துக்கு அனுமதி கொடுத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் சிதம்பரம் கூறுகையில் "சிபிஐ என்னிடம் சிறிய வாக்குமூலம் வாங்கினர். ஏற்கனவே பத்திரிகையாளர்களிடம் நான் கூறியதைத்தான் சிபிஐயிடமும் தெரிவித்தேன். அதைவிட அதிகமாக எதுவும் சொல்வதற்கில்லை" என்று தெரிவித்துள்ளார்.