ஜெகன் சொத்துக்குவிப்பு வழக்கு: ரூ. 70 கோடி முதலீடு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம்
ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 11-வது குற்றப்பத்திரிகையை சிபிஐ செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.
இந்து வீடு கட்டும் நிறுவனம் அரசிடம் இருந்து முறைகேடாக நிலம் பெற்றதற்கு பிரதிபலனாக ஜெகன் மோகன் ரெட்டியின் நிறுவனத்தில் ரூ. 70 கோடி முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி இவர், தன் தந்தை முதல்வராக இருந்தபோது தனக்கு சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்த பல நிறுவனங்களுக்கு தந்தையின் ஆட்சியில் சலுகை பெற்றுத் தந்ததாகவும், அத்துடன் வருமானத்திற்கு அதிகமாக ஏராளமான அளவில் சொத்து சேர்த்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டன.
இதில் ஜெகன் சுமார் 6 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் ஜாமீனில் வெளியாகி வழக்குகளை சந்தித்து வருகிறார். ஜெகன் மோகன் ரெட்டி மீது கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் இதுவரை 10 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 11-வது குற்றப்பத்திரிகை செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் குற்றப்பத்திரிக்கையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ஹைதராபாத்தில் இந்து வீடு கட்டும் நிறுவனத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
இதற்கு பிரதிபலனாக அந்நிறுவனம் ஜெகன் மோகன் ரெட்டியின் நிறுவனத்தில் ரூ. 70 கோடி முதலீடு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் ஜெகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர மேலும் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.