நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: ஜிண்டால் உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கினை விசாரித்து வரும் சி.பி.ஐ., இது தொடர்பாக தனது விசாரணை அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர்கொண்டா முர்கதங்கல் நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.
இதில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால், முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் மது கோடா, நிலக்கரித்துறை முன்னாள் இணை அமைச்சர் தாசரி நாராயண் ராவ், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எக்.சி.குப்தா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் லிமிடெட் மற்றும் ஜிண்டால் ரியால்ட்டி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 5 நிறுவனங்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த குற்றப்பத்திரிகை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.