நிலக்கரி சுரங்க முறைகேடு.. சி.பி.ஐ. மாஜி இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது வழக்கு
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
டெல்லி: நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்து பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவை பலமுறை அவரது வீட்டில் சந்தித்ததாக புகார் எழுந்தது. அவரது வீட்டு வருகைப் பதிவேட்டில் இதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நிலக்கரி சுரங்க ஊழல் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.