ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ அப்பீல்: மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ்!
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விளக்கம் தர மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது விளக்கம் தர இருவருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியரான சிவசங்கரன் நடத்தி வந்த ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் அனந்தகிருஷ்ணன் நடத்தி வந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. மேக்சிஸ் நிறுவனத்திற்கு பங்குகளை விற்றதன் பயனாகவே அந்நிய முதலீடு என்ற பெயரில் சன்டிவிக்கு லஞ்சப்பணம் அளிக்கப்பட்டதாகவும், இது முதலீடு அல்ல என்றும் ஏர்செல் சிவசங்கரன் கூறியிருந்தார்.
ஆனால் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் அனந்தகிருஷ்ணன் வெளிநாட்டில் வாழ்வதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறை மற்றும் சிபியால் முடியவில்லை. இதனால் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு அளித்தது.
இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் மாறன் சகோதரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.