அரசுக்கு ரூ.709 கோடி இழப்பு! முன்னாள் மத்திய அமைச்சர் சங்கர் சிங் வகேலா உள்பட 6 பேர் மீது வழக்கு!
டெல்லி : தேசிய ஜவுளி கழகத்துக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு விற்று அரசுக்கு ரூ.709 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக ஜவுளித்துறையின் முன்னாள் அமைச்சர் சங்கர் சிங் வகேலா மற்றும் தேசிய ஜவுளி கழகத்தின் தலைவரும், நிறுவனருமான ராமச்சந்திரன் பிள்ளை உள்பட 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து ஒரு ஆண்டு காலம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையை தொடர்ந்து சங்கர் சிங் வகேலா மற்றும் ராமச்சந்திரன் பிள்ளை உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ நில மோசடி வழக்கு பதிவு செய்தது.
இதைதொடர்ந்து சி.பி.ஐ போலீசார், சங்கர் சிங் வகேலா உள்ளிட்ட 6 பேரின் வீடுகள் உள்பட டெல்லி, காந்தி நகர், மும்பை, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் 9 இடங்களில் சோதனை நடத்தினர்..
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சங்கர் சிங் வகேலா குஜராத் சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவராகவும் உள்ளார். இவர் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் என்பது கூடுதல் தகவல்.