பிஎன்பி வங்கி முறைகேடு.. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் சிபிஐ விசாரணை
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரிடம் தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது. இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
சிபிஐ சில முதற்கட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருக்கிறது. தற்போது வரை இதில் 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தமாக 5,300 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
ஆனால் இந்த வழக்கில் இதற்கு மேல் எதுவும் முன்னேற்றம் நடக்கவில்லை. நீரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவரை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ கூறியுள்ளது.
இந்த நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் ஹெச்.ஆர்.கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்தான் நீரவ் மோடி லோன் பெறுவதற்கு உதவியாக ஆவணங்களை மாற்றியதாக கூறப்படுகிறது.
இந்த முறைகேட்டில் இவருக்கு எந்த அளவிற்கு பங்கு இருக்கிறது, எவ்வளவு பணம் கைமாறியது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.