ஏர்செல் - மேக்ஸில் வழக்கு: அக் 4-ம் தேதி ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன்!
டெல்லி: ஏர்செல் - மேக்ஸிஸ் பண மோசடி வழக்கில் வரும் அக்டோபர் 4-ம் தேதி கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதில் பணமோசடி நடந்ததாக கூறி சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரம் தனது தந்தை ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்திடம் இருந்து அன்னிய முதலீட்டை பெற்றபோது பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.
இந்த நிலையில், நிதிமுறைகேடு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை நேற்று முன்தினம் முடக்கி வைத்தது. இதில் அவர் நிரந்தர வைப்புத் தொகையில் வைத்துள்ள ரூ.90 லட்சமும் அடங்கும்.
அடுத்ததாக வரும் அக்டோபர் 4ம் தேதி வழக்கு விசாரணைக்காக அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 14-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டிருந்தது. ஆனால் நடந்து முடிந்த வழக்கில் ஆஜராக முடியாது என கார்த்தி சிதம்பரம் பதில் கூறி, ஆஜராக மறுத்துவிட்டார்.