ஐஸ்கிரீம் பார்லர் விபசார வழக்கு: கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
கோழிக்கோட்டில் தனியார் ஐஸ்கிரீம் பார்லர் என்ற பெயரில், விபசாரம் மற்றும் பெண்களை விற்பனை செய்வதாக, 1990ம் ஆண்டு புகார் எழுந்தது. இதுகுறித்து, மாநில தனிப்படை போலீசார், விசாரணை நடத்தினர். ஆனால், புகாருக்கான போதுமான ஆதாரங்கள், சாட்சிகள் கிடைக்காமல் போலீசார் திணறினர்.
இதில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் தற்போது தொழில் துறை அமைச்சராக இருக்கும் பி.கே.குஞ்சாலிகுட்டி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் குஞ்சாலிகுட்டியின் உறவினரான ரவூப் என்பவர்தான் முக்கிய குற்றவாளி என்றும் கூறப்பட்டது. இதனால் ரவூப்புக்கு ஆதரவாக இருந்த டிஐஜி ஸ்ரீஜித் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், 21 ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இவ்வழக்கை சி.பி.ஐ.,விசாரணை நடத்த உத்தரவிடுமாறு, முன்னாள் முதல்வரும், தற்போது, சட்டசபை எதிர்க் கட்சித் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், ஐகோர்ட்டில் இரண்டுமுறை மனுத்தாக்கல் செய்தார். அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்தும் இந்த செக்ஸ் வழக்கு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் அச்சுதானந்தம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு பதில் அளிக்குமாறு கேரளா மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டது.