நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு: மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை?
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-ம் ஆண்டு ஏற்பட்டபோது மன்மோகன் சிங் தன்வசம் நிலக்கரி சுரங்கத் துறையை வைத்திருந்தார்.
சுமார் 5 ஆண்டுகள் நிலக்கரி அமைச்சகப் பணிகளை அவர் கவனித்து வந்தார். அப்போது ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
நிலக்கரி சுரங்கங்களை தனியார்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி ஆய்வு செய்த மத்திய கணக்குத் தணிக்கைத் துறையினர் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழலால் மத்திய அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக கடந்த 2012-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
நிலக்கரி சுரங்கங்கள் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் ஜிண்டால் ஸ்டீல், ஹிண்டால்கோ உள்பட காங்கிரசாருக்கு சொந்தமான பல நிறுவனங்கள் பயன் அடைந்து இருப்பது தெரிய வந்தது. அந்த நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் 16 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்த முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி.பரக் இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஆக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தில் முடிவு எடுத்த காரணத்துக்காக நான் சதி செய்ததாக குற்றம் சாட்டினால், அதில் மன்மோகன்சிங்குக்கும் பங்கு உண்டு என்றார்.
பின்னர் இது தொடர்பான வழக்கு விசாரணைகளின் போது, நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த மன்மோகன்சிங்கிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதனைத் தொடர்ந்து சுரங்கத்தை ஹிண்டல்கோ நிறுவனத்திற்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விசாரணை ஒரு சில நாட்களில் நடைபெறும் என்றும் தெரிகிறது.