கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசுக்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கார்த்தி சிதம்பரத்தின் லுக் அவுட் நோட்டீஸ்ஸுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் லுக் அவுட் சுற்றறிக்கைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு உச்சநீதிமன்றத்தில் தடை விதித்துள்ளது.
ப. சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்துக்கு வெளிநாடு முதலீட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்க, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 90 லட்சம் ரூபாய் லஞ்சம் கைமாறியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் வீட்டில் வருமானவரித் துறை ரெய்டு நடத்தி விசாரணையும் மேற்கொண்டது. இந்நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத் தேடப்படும் நபர் என கார்த்தி சிதம்பரம் மீது லுக் அவுட் சுற்றறிக்கையை மத்திய உள்துறை அறிவித்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த லுக் அவுட் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி கார்த்தி சிதம்பரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் லுக் அவுட் சுற்றறிக்கைக்கு தடை விதித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடையை எதிர்த்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. சிபிஐ அளித்த மனுவில், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, இடையூறு ஏற்படுத்தும் வகையில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்க வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு வரும் 18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.