சோட்டா ராஜனை அழைத்து வர இந்தோனேசியா கிளம்பிய சிபிஐ-மும்பை போலீஸ் குழு
மும்பை: நிழல் உலக தாதா சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் மற்றும் மும்பை போலீசார் அடங்கிய குழு இந்தோனேசியா கிளம்பியுள்ளது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமிடம் இருந்து விலக தனி சாம்ராஜ்ஜியம் அமைத்தவர் சோட்டா ராஜன். 20 ஆண்டுகளாக இன்டர்போல் போலீசார் பிடியில் சிக்காமல் தப்பித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவரை சக கைதிகள் தாக்கியதால் அவர் பாலி தீவு காவல் நிலையத்தில் உள்ள தனி சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் மற்றும் மும்பை போலீசார் அடங்கிய குழு இந்தோனேசியா கிளம்பியுள்ளது.
பாலி தீவுக்கு செல்லும் அந்த குழு முதலில் உள்ளூர் போலீசாரை சந்தித்து பேசுகிறது. அதன் பிறகு அவர்கள் ராஜனை சந்தித்து விசாரணை நடத்த உள்ளனர். ராஜனை ஒப்படைக்க இந்தோனேசிய அதிகாரிகள் நிபந்தனை எதுவும் விதிப்பார்களா என்று பார்க்க வேண்டும்.
இந்தியா அழைத்து வரப்படும் அவர் மும்பையில் பாதுகாப்பு அதிகம் உள்ள சிறையில் அடைக்கப்பட உள்ளார். டெல்லியில் ராஜன் மீது 6 வழக்குகள் உள்ளதால் அவர்களும் அவரை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
மும்பையில் சோட்டா ராஜன் மீது 75 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.