கெளரி லங்கேஷ் கொலையாளிகளை கூண்டில் ஏற்ற தேவை ரூ. 7 கோடி!
- ஆர்.மணி
சென்னை: சில ஆண்டுகளுக்கு முன்பு வரிசையாக ஒருவர் பின் ஒருவராக சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி மற்றும் முற்போக்கு பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் ஆகியோரின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களை சட்டப்படி தண்டிக்க ஏழு கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
விஷயம் இதுதான்; மஹாராஷ்டிராவை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மஹாராஷ்டிர மாநிலம் பூனாவில் 2013 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.. கோவிந்த் பன்சாரே 2015 ம் ஆண்டு பிப்ரவரியில் சுட்டுக் கொல்லப் பட்டார். கர்நாடகாவை சேர்ந்த கல்வியாளர் எம்.எம். கல்புர்கி ஆகஸ்ட் 2015 ல் சுட்டுக் கொல்லப் பட்டார். 2017 செப்டம்பரில் பெங்களூருவில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப் பட்டார். இந்த வழக்குகளை மஹாராஷ்டிர மற்றும் கர்நாடக காவல் துறையினர் கூட்டாக விசாரித்து வந்தனர்.
பின்னர் இந்த நான்கு வழக்குகளும் சிபிஐ க்கு மாற்றப் பட்டது. 2018 ம் ஆண்டு இந்த கொலை வழக்குகளில் சம்மந்தப் பட்டவர்கள் என்று கூறி சிலரை சிபிஐ கைது செய்தது. கைது செய்யப் பட்டவர்கள் அனைவரும் சனாதன சன்ஸ்தா ஹிந்து ஜன்ஜக்குரிதி சமிதி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று சிபிஐ கூறுகிறது. மிகவும் சவாலான இந்த நான்கு கொலை வழக்குகளில் உண்மை குற்றவாளிகளை நாங்கள் கைது செய்து விட்டோம் என்று கூறுகிறது சிபிஐ. ஆனால் கைதானவர்களை நீதிமன்றத்தின் கூண்டுகளில் ஏற்றி அவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தர சிபிஐ க்கு தற்போது ஏழு கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது.
எதற்காக சிபிஐ க்கு ஏழு கோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது? காரணம் இதுதான்; எப்போதுமே போலீசுக்கு ஒரு கொலை வழக்கை விசாரிக்கும் போது உண்மை குற்றவாளிகளை அவர்கள் பிடித்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தர முக்கியமாக தேவைப்படும் விவகாரங்களில் ஒன்றுதான் கொலையாளிகள் கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றுவது. இந்த ஆயுதங்கள் - அவை துப்பாக்கிகள், பட்டாக் கத்திகள், அறுவாள்கள் - எதுவாக இருந்தாலும் அவற்றை முதலில் கைப்பற்ற போலீஸ் அதீத ஆர்வம் காட்டும். இந்த ஆயுதங்கள்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கும்.
"இந்த நான்கு கொலைகளிலும் நாங்கள் நான்கு ஆயுதங்களை பொதுவாக பயன்படுத்தினோம். நான்காவது கொலைக்குப் பிறகு இந்த நான்கு ஆயுதங்களையும் நாங்கள் மஹாராஷ்டிர மாநிலத்தின் தானே பகுதியில் உள்ள ஒரு சதுப்பு நிலத்தில் தூக்கி எறிந்து விட்டோம்" என்று கூறுகிறார் இந்த வழக்கில் கைதாகியிருக்கும் ஷரத் கலாஸ்கர் என்பவர்.
இந்த ஆயுதங்களை கண்டு பிடிக்கும் கடுமையான முயற்சிகளில் தற்போது சிபிஐ இறங்கியிருக்கிறது. ஆனால் இதுவரையில் வெற்றி கிடைக்கவில்லை. இதற்கு காரணம் இந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க தேவையான நவீன உபகரணங்கள் சிபிஐ வசம் தற்போது இல்லாததுதான். "நாங்கள் ஓஎன்ஜிசி, இந்திய கடலோர காவற்படை, இந்திய கப்பற்படை ஆகியவற்றை அணுகினோம். ஆனால் அவர்கள் இதற்கான உபகரணங்கள் தங்களிடம் இல்லை என்று கூறி கை விரித்து விட்டனர். துபாயில் உள்ள ஒரு நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. ஆனால் அவர்கள் தங்களுக்கு இந்த பணியில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் தேவைப் படுவதாக சொல்லியிருக்கின்றனர்.
இந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த 2 கோடி ரூபாய் உபகரணங்களுக்கு 5 கோடி ரூபாய்க்கு இறக்குமதி வரி கட்ட வேண்டும். ஆகவே மொத்தம் 7 கோடி ரூபாய் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வாங்கித் தர தேவைப்படுகிறது" என்று கூறுகிறார் சிபிஐ உயரதிகாரி ஒருவர். இந்த சதுப்பு நிலக் காடுகளை அலசி ஆராய மத்திய சுற்றுப் புற சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் தேவை என்று அவர் மேலும் சொல்லுகிறார்.
கொலையில் பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள் வழக்கு விசாரணைக்கு நிச்சயம் தேவைதான். ஆனால் வேறு சந்தர்ப்ப சாட்சியங்கள் வலுவாக இருந்தால் உண்மைக் குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வாங்கித் தர முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. "கொலை வழக்குகளில் உண்மை குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர கொலை செய்ய பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள் நிச்சயம் சாட்சி விசாரணைகளின் போது தேவைதான். ஆனால் சில நேரங்களில் ஆயுதங்கள் கண்டு பிடிக்கப் பட முடியாத அளவுக்கு காணாமல் போய் விட்டால் அந்த ஒரு காரணத்தால் மட்டும் குற்றம்சாட்டப் பட்டவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
வேறு சாட்சியங்கள், அதாவது, கொலையாளி இதுபோன்று சதுப்பு நிலக் காடுகள் அல்லது வேறு இடங்களில் குறிப்பிட்ட ஆயுதத்தை தூக்கி எறிந்ததைப் பார்த்த வலுவான வேறு சில மனித சாட்சியங்கள் அல்லது தொழில் நுட்ப சாட்சியங்கள் இருந்தால், கொலைக்கு பயன்படுத்தப் பட்ட ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் கூட போலீசாரால் உண்மை குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்" என்று கூறுகிறார் தமிழக காவல் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் கருணாநிதி. "சந்தர்ப்ப சாட்சியங்கள் முக்கியமானவை. சம்பந்ப்பட்ட குற்றவாளி சதுப்பு நிலக் காட்டில் அந்த ஆயுதங்களை எறிந்ததை பார்த்த மனித சாட்சிகள் இருந்தாலே கூட போதுமானதுதான், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க" என்று அவர் மேலும் கூறுகிறார்.
இதனிடையே இந்த ஏழு கோடி ரூபாயை தங்களுக்குள் சமமாக பங்கிட்டு இறக்குமதி வரி செலுத்த மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசாங்கங்கள் முன்வந்துள்ளன. சிபிஐ இந்த விவகாரத்தில் வரி விலக்கு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனால் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் இதுவரையில் சிபிஐ க்கு வரவில்லை.