மேற்கு வங்கத்தில் பரபரப்பாகும் நிலக்கரி ஊழல் வழக்கு: மம்தா பானர்ஜி உறவினரிடம் சிபிஐ அதிரடி விசாரணை!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி உறவினர் ருஜிரா பானர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடைபெறுவதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார்.
திரிணாமுல் காங்கிரசில் இருந்து ஏற்கனவே பல தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், நிலக்கரி ஊழல் வழக்கு மம்தா பானர்ஜிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
நிலக்கரி ஊழல் வழக்கு
மேற்கு வங்காளத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்தது தொடர்பாக பல கோடிஊழல் நடந்தது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. அதில் அனுப் மஜி எனும் லாலா மற்றும் பினாய் மிஸ்ரா ஆகிய இரு முக்கிய சதிகாரர்கள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. அனுப் லாலா இந்த வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ருஜிரா பானர்ஜி என்பவரிடம் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
மம்தா பானர்ஜி உறவினருக்கு சம்மன்
இந்த ருஜிரா பானர்ஜி அபிஷேக் பானர்ஜி என்பவரின் மனைவி ஆவார். அபிஷேக் பானர்ஜியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உறவினர்கள். திரிணாமுல் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் பானர்ஜி, டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கில் ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.ருஜிராவின் சகோதரி மேனகா காம்பிருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
சிபிஐ அதிகாரிகள் விசாரணை
இதற்கு பதிலளித்த ருஜிரா பானர்ஜி, இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனது குழுவுடன் விசாரணையில் இணைவதாக சிபிஐயிடம் கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று ருஜிரா பானர்ஜியின் வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணைகள் நடத்தினர். மேலும், விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், மேனகா காம்பிர் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். மேனகா காம்பிரிடம் நேற்று சிபிஐ விசாரணை நடத்தியது.
மம்தா பானர்ஜி சந்தித்தார்
சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடைபெறுவதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார். சுமார் 10 நிடங்கள் அவர் அங்கு இருந்தார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து ஏற்கனவே பல தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில், நிலக்கரி ஊழல் வழக்கு மம்தா பானர்ஜிக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.