நடிகர் கலாபவன் மணி மர்ம மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்
நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் இருப்பதால் அந்த வழக்கை கேரள அரசு சிபிஐ துறைக்கு மாற்றியது.
டெல்லி: மலையாள நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் இருப்பதால் அந்த வழக்கானது சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
மலையாள திரைப்பட நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் கலாபவன் மணி. கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி காலக்குடி ஆற்றங்கரையில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற கலாபவன் மணிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
திடீர் மரணம்
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
பூச்சி மருந்து
இதைத் தொடர்ந்து கலாபவன் மணியின் உடலை கொச்சியில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து, கலந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் ஹைதராபாத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அதில் மெத்தனால் கலந்திருப்பது தெரியவந்தது.
கல்லீரல் பாதிப்பு
ஆனால் போலீஸ் தரப்பில் கல்லீரல் பாதிக்கப்பட்டதே கலாபவன் மணியின் மரணத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் நீடித்து வந்தது. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த கலாபவன் மணியின் உறவினர்கள், மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் கேரள உயர் நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தனர்.
உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த மனுவை மீதான விசாரணை கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கலாபவன் மணி மரணம் தொடர்பாக சிபிஐ தனது விசாரணையை ஒரு மாதத்துக்குள் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
சிபிஐ வசம் ஒப்படைப்பு
இந்த சூழலில் அவரது மரண வழக்கானது இன்று சிபிஐயிடம் கேரள போலீஸார் ஒப்படைத்தனர். இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது விசாரணையில் தெரியவரும். இதனால் மணியின் உறவினர்கள் மன நிம்மதி அடைந்துள்ளனர்.