ஜெயலலிதா மரணம்.. அறிக்கை மட்டும் வரட்டும், பார்த்துக்கொள்கிறோம்.. மத்திய அமைச்சர் அதிரடி
டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசின் விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் கூறினார்.
லோக்சபாவில், இன்று பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கோஷமிட்டனர்.
ஜெயலலிதா இறப்பு குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆனால் சசிகலா ஆதரவு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.
பன்னீர்தரப்பு எம்.பி
பன்னீர்செல்வம் ஆதரவாளரான, நாமக்கல் தொகுதி எம்.பி சுந்தரம் பேசுகையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, 75 நாட்களாக அவரை யாரையும் சந்திக்க சந்திக்க அனுமதிக்கவில்லை.
முரண்பட்ட தகவல்
ஜெயலலிதாவை முதலில், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினர். ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக மரணடைந்ததாக கூறுகின்றனர். முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படுகின்றன.
சி.பி.ஐ விசாரணை
தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மாநில முதல்வருக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்க கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பதில்
இதற்கு பதிலளித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் பேசினார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவின் திடீர் மரணம் நாட்டிற்கும், இந்த அவைக்கும் பெரும் கவலை அளிக்கிறது.
அறிக்கை கிடைக்கட்டும்
ஜெயலலிதா மரணம் அசாதாரணமான சூழ்நிலையில் நிகழ்ந்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர். ஆனாலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மாநில அரசு ஏற்கனவே விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த இந்த அறிக்கை கிடைத்த பின்னர் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.