கார்த்தி சிதம்பரத்தை 12 நாள் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு
சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் இன்று டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை 12 நாட்களுக்கு திகார் சிறையில் அடைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுக்கான தடையில்லா சான்றிதழுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திடம் ரூ10 லட்சம் கமிஷன் வாங்கியதாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த 1-ஆம் தேதி லண்டனில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ கோரியது.
கார்த்தியை மும்பை கொண்டு சென்ற சிபிஐ
எனினும் 6 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு நடந்த மும்பைக்கு கடந்த 4-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கார்த்தியை அழைத்து சென்றனர்.
இந்திராணி முன்பு கார்த்தியிடம் விசாரணை
இந்திராணி முகர்ஜிக்கும் கார்த்திக்கும் இடையேயான பண பரிவர்த்தனை உள்ளிட்டவை கூடுதல் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு கார்த்தியை அழைத்து சென்று சிபிஐ விசாரித்தது.
3 நாட்களுக்கு
இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி அவரது காவல் முடிவடைந்த நிலையில் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு சிபிஐ காவல் நீட்டிக்கப்பட்டது. கார்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளனர்.
பாட்டியாலா நீதிமன்றம்
கார்த்தி சிதம்பரத்துக்கு 3 நாட்கள் காவல் கடந்த 9-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மேலும் 6 நாட்கள் காவல் நீட்டிக்க சிபிஐ அதிகாரிகள் கோரிய நிலையில் வெறும் 3 நாட்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டது.
சிபிஐ கோரிக்கை
மேற்கண்ட 3 நாட்கள் காவலும் முடிவடைந்த நிலையில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி சுனில் ராணா முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. இந்த பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரை வரும் 24-ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு திகார் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளார்.
வீட்டு சாப்பாடு இல்லை
சிறையில் வெளியிலிருந்து உணவு கொண்டு வர அனுமதி அளிக்க கார்த்தி சிதம்பரம் நீதிபதியிடம் அனுமதி கோரினார். ஆனால் நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் சிறைத் துறை மருத்துவர்களின் அறிவுரைப்படியின் மருந்துகள் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.