சொத்துக்குவிப்பு: ஹிமாச்சல பிரதேச காங்கிரஸ் முதல்வர் வீரபத்ரசிங் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை
சிம்லா: வருவாய்க்கு அதிகமாக சொத்துக்குவித்த புகாரின்பேரில், ஹிமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங்கின் வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வராக (காங்கிரஸ்) இருப்பவர், வீரபத்ர சிங். இவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வந்த புகார்களை தொடர்ந்து இன்று காலை முதல் வீரபத்ரசிங் வீடுகளில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்கள்.
வீரபத்ரசிங்கின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை காலை முதல் தொடர்ந்து நடந்துவருகிறது. மொத்தம் 5 வாகனங்களில் வந்த அதிகாரிகள் வீரபத்ர சிங் வீட்டுக்குள் போனதாக கண்ணால் பார்த்த சிலர் கூறுகிறார்கள்.
சிங்கும் அவரது குடும்பத்தாரும், ரெய்டு நடைபெறும்போது வீட்டில் இல்லை என்று கூறப்புடகிறது. வீரபத்ரசிங்கின் தனிச்செயலாளரிடமும் அமலாக்கப்பிரிவு விசாணை நடத்தி வருகிறது. வீரபத்ரசிங்கிற்கு சொந்தமான இடங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வீரபத்ர சிங் மீது சிபிஐ வழக்குப்பதிவும் செய்துள்ளது. இது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.