சொத்து குவிப்பு வழக்கு... இமாச்சல பிரதேச முதல்வர் இல்லம், அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
சிம்லா : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இமாச்சல பிரதேச காங்கிரஸ் முதல்வர் வீர்பத்ர சிங் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இமாச்சல்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ளது. அம்மாநிலத்தின் முதல்வராக வீரபத்திரசிங் உள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பதவி வகித்தார் வீரபத்திரசிங், இவர் மீதும், மனைவி பிரதீபா சிங், மகன் விக்ரமாதித்யாசிங் ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கினை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த ஜுன் மாதம் வீரபத்திரசிங் மீது வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று தலைநகர் சிம்லாவில் உள்ள இவரது வீடு, அலுவலங்கள் உள்ளிட்ட 11 இடங்களில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் 18 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சி.பி.ஐ.யின் சோதனையால் இமாச்சல முதல்வர் வீரபத்திரசிங்கிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.