மணிப்பூர் மாஜி முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடி ரெய்டு- ரூ26 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
இம்பால்: மணிப்பூரில் ரூ332 கோடி ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் இபோபிசிங் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ26 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள், 8 ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மணிப்பூர் மேம்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் முதல்வராக இருந்த போது இபோபி சிங் பதவி வகித்தார். இந்த வாரியத்தில் ரூ332 கோடி அளவுக்கு ஊழல் முறைகேடு நடைபெற்றது என்பது வழக்கு.
இபோபி சிங் உட்பட 5 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இன்று இபோபிசிங் உள்ளிட்டோர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பல மணிநேரம் நடைபெற்ற சோதனையில் இபோபி சிங் வீட்டில் ரூ15.47 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ26 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள், 8 ஆடம்பர கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கிரஸ் எதிர்ப்பு
ஆனால் இபோபிசிங் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாகா அமைதி ஒப்பந்தம் உள்ளிட்டவைகளில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்த இருந்தனர்.
இதற்கு பழிவாங்கும் வகையில்தான் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என குற்றம்சாட்டியுள்ளது காங்கிரஸ்.