அன்னிய செலாவணி முறைகேடு... என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ ரெய்டு
அன்னிய செலாவணி முறைகேடு தொடர்பாக என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய்க்கு சொந்தமான 4 இடங்களில் சிபிஐ ரெய்டு இன்று நடத்தப்பட்டது.
டெல்லி: அன்னிய செலாவணி விதிகளை மீறி என்டிடிவி நிறுவனத்துக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக அதன் துணை நிறுவனரும், நிர்வாக துணை தலைவருமான பிரணாய் ராய் வீடுகளில் இன்று சிபிஐ ரெய்டு நடைபெற்றது.
பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இந்தியாவில் உள்ள வங்கியில் ரூ.48 கோடி கடன்பெற்று அதை வெளிநாடுகளில் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.
இதனால் ரூ.2,030 கோடி அன்னிய செலாவணி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய அமலாக்கத் துறை அந்த தொகையை உடனே செலுத்துமாறு பிரணாய் ராய்க்கு கடந்த 2015-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது.
அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்றும், பொய்யானவை என்றும் ரூ.2030 கோடி செலுத்துமாறு அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் என்டிடிவி கோரிக்கை விடுத்தது. எனினும் என்டிடிவியின் கோரிக்கையை இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது.
இதைத் தொடர்ந்து பிரணாய் ராய்க்கு சொந்தமான டெல்லி, டெராடூன் உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ சோதனை இன்று நடைபெற்றது.
என்டிடிவி நிர்வாகம் விளக்கம்
இதுகுறித்து என்டிடிவி நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிபிஐ என்டிடிவி நிறுவனருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தியது. எதிரிகளின் சதி திட்டத்தை எதிர்த்து போராடுவோம்.
ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் எப்போதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நிறுவனத்தை அழிக்க நினைப்போருக்கு நாங்கள் ஒரு விஷயத்தை கூறிக் கொள்ள விரும்புகிறோம். நாட்டு நலனுக்காக கடுமையாக நாங்கள் போராடி இதுபோன்ற தீயசக்திகள் கொடுக்கும் குடைச்சல்களில் இருந்து மீளுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.