ரூபாய் நோட்டு மாற்றுவதில் முறைகேடு: ஹைதராபாத் அஞ்சலகங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!
ஹைதராபாத் அஞ்சலகங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரால் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.
ஹைதராபாத்: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரால் தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் 8 அஞ்சலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
கடந்த 8 ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றினர். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அஞ்சலகங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது.
மேலும் மற்ற அஞ்சலகங்களில் இருந்து பல காசோலைகள் தலைமை அஞ்சலகங்களுக்கு கணக்கு சரிபார்க்க வந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து புகாருக்கு ஆளான 8 அஞ்சலகங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். சிபிஐ அதிகாரிகளின் திடீர் ஆய்வால் பரபரப்பு நிலவியது.