வெளிநாட்டு நிதி: சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் வீடு, என்.ஜி.ஓ. அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு!
மும்பை: வெளிநாட்டு நிதி உதவி பெற்று மத்திய அரசுக்கு எதிராக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டின் வீடு மற்றும் என்.ஜி.ஓ அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் செதல்வாட், 2002ஆம் ஆண்டு கோத்ரா கலவரங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியவர்களில் முக்கியமானவர். டீஸ்டா செதல்வாட்டின் சப்ரங்க் கம்யூனிகேஷன்ஸ் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட நிதி உதவியை இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக குஜராத் அரசு புகார் அளித்தது.
இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் விசாரணைகளை நடத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் செதல்வாட்டின் என்.ஜி.ஓ. தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மொத்தம் 5 வழக்குகளை செதல்வாட்டுக்கு எதிராக சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இந்த விசாரணையின் ஒருபகுதியாக இன்று மும்பையில் உள்ள டீஸ்டா செதல்வாட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த 2006-2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான டீஸ்டாவின் என்.ஜி.ஓ. அலுவலக பணப் பரிவர்த்தனைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதேபோல் டீஸ்டா செதல்வாட் தொடர்புடைய வேறு இடங்களிலும் அதிரடியாக ரெய்டு நடத்த உள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.