சுற்றுச் சூழல் அனுமதி: 3 புதிய பூர்வாங்க விசாரணை பதிவு- ஜெயந்தி நடராஜனிடம் விரைவில் சிபிஐ விசாரணை?
டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது ஜெயந்தி நடராஜன் பல்வேறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக சிபிஐ புதிதாக மூன்று பூர்வாங்க விசாரணைகளைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் கோருவதற்காக ஜெயந்தி நடராஜனை விரைவில் சிபிஐ அழைக்கக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். கடந்த 2013ஆம் ஆண்டு திடீரென மத்திய அமைச்சரவையில் இருந்து ஜெயந்தி நடராஜன் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகாலம் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்தார் ஜெயந்தி. இந்நிலையில் திடீரென நேற்று கடந்த நவம்பர் மாதம் சோனியாவுக்கு அவர் எழுதிய நீண்ட கடிதம் ஒன்று ஊடகங்களில் வெளியானது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அக்கடிதம் குறித்து விளக்கம் அளித்த ஜெயந்தி தம்மை ஓரம் கட்டிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாகவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ஜெயந்தி நடராஜன் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, சுற்றுச்சூழல் துறையில் பெயர் தெரியாத அதிகாரிகள் மீதும் ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்தின் மீதும் சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2 பூர்வாங்க விசாரணைகளைப் பதிவு செய்திருந்தது.
தற்போது மேலும் மூன்று பூர்வாங்க விசாரணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ பதிவு செய்துள்ள பூர்வாங்க விசாரணைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
மேலும் ஜெயந்தி நடராஜனின் பதவிக்காலத்தில் அளிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிகள் தொடர்பாக அத்துறை அதிகாரிகள் சிலரிடம் சி.பி.ஐ. ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜெயந்தி நடராஜனிடமும் விசாரணை நடத்த சிபிஐ உத்தேசித்துள்ளது.
இதனிடையே, மாநில அரசு அதிகாரிகளையும் சிபிஐ விசாரித்துள்ளதோடு, ஆவணங்களையும் ஆராய்ந்துள்ளது. சில கோப்புகளுக்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்றும் சில கோப்புகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிலுவையில் வைத்தது ஏன்? என்றும் ஜெயந்தி நடராஜனிடம் சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.