11 வங்கிகளை ஏமாற்றி ரூ. 2,654 கோடி கடன் மோசடி... குஜராத் டைமண்ட் நிறுவனம் மீது வழக்கு!
11 வங்கிகளை ஏமாற்றி ரூ.2,654 கோடி மோசடி செய்த வதோதராவை சேர்ந்த டைமண்ட் பவர் உள்கட்டமைப்பு லிமிடெட் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
டெல்லி : போலி வங்கிக்கணக்குகள், மோசடியான ஆவணங்களைக் காட்டி 11 வங்கிகளிடம் ரூ. 2,654.40 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக குஜராத்தை சேர்ந்த நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. வதோதராவைச் சேர்ந்த டைமண்ட் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 ஊழல் தடுப்புச் சட்டங்கள் உள்பட 5 பிரிவுகளின் கீழ் இந்த நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. டைமண்ட் பவர் நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் நரேன்பட்நகர், நிர்வாக இயக்குனர் அமித் சுரேஷ் பட்நகர், துணை நிர்வாக இயக்குனர் சுமித் சுரேஷ் பட்நகர் ஆகிய 3 பேரும் இந்த மோசடி விவகாரத்தில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
வங்கி அதிகாரிகளின் துணையோடு தவறான வங்கிக்கணக்குகள், மோசடி ஆவணங்கள், தவறான தகவல்களைக் கொடுத்து ரூ.2,654.40 கோடி கடன் பெற்றுள்ளனர். இந்த நிறுவனமும் அதன் இயக்குனர்களும் மோசடியாக கடன் பெற்றதோடு சலுகைகளையும் அனுபவித்துள்ளனர். இவர்கள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட மோசடியாளர்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளனர்.
சென்னையில் கனிஷ்க் கோல்ட் நிறுவனம் ரூ. 824.15 கோடி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக ஹைதராபாத்தை சேர்ந்த டோடெம் இன்ப்ராஸ்டரக்சர் நிறுவனம் ரூ. 1,394 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிறுவனம் கேபிள் மற்றும் இதர எலக்ட்ரிகல் சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிலை செய்து வருகின்றன.
தற்போது சிபிஐ பிடியில் சிக்கியுள்ள வதோதரா நிறுவனம் கடந்த 2008 முதல் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளை மோசடி செய்து ரூ. 2,654.40 கோடி ஏமாற்றியுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, ஐசிஐசிஐ வங்கி, அலகாபாத் வங்கி, ஆக்சிஸ் வங்கி, தேனா வங்கி, எஸ்பிஐ, ஐஓபி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் சில நிதி நிறுவனங்களை ஏமாற்றியுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. டைமண்ட் பவர் நிறுவனத்தின் உரிமையாளர்களின் வதோதரா வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று சிபிஐ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.