இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு
டெல்லி: இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அவர் ஒரு அப்பாவி கல்லூரி மாணவி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது. இதை தனது அடுத்த குற்றப்பத்திரிக்கையில் அது தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
19 வயதான இஷ்ரத் தீவிரவாதி என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இஷ்ரத் ஒரு சாதாரண கல்லூரி மாணவியே என்று தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாம்.
இஷ்ரத் ஜஹானும், மேலும் 3 பேரும் 2004ம் ஆண்டு அகமதாபாத் அருகே குஜராத் போலீஸார் நடத்திய போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் நான்கு பேரும் தீவிரவாதத் தொடர்புடையவர்கள் என்பது குஜராத் போலீஸாரின் வாதம். ஆனால் இஷ்ரத் தரப்பு அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
உச்சநீதிமன்றமும் இஷ்ரத் ஜஹானுக்கு தீவிரவாதத் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதை சிபிஐ தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இஷ்ரத் குறித்த தனது நிலையை அடுத்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கவுள்ளது சிபிஐ.
இன்னும் 2 வாரங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த குற்றப்பத்திரிக்கையில், இஷ்ரத் ஜஹான் அப்பாவி, கல்லூரிப் பெண் என்று சிபிஐ தெரிவிக்கவுள்ளதாம்.
அப்படி சிபிஐ தெரிவித்தால் அது நரேந்திர மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் குஜராத் கோர்ட்டில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில், இஷ்ரத்தையும் அவருடன் இருந்த 3 நண்பர்களையும் குஜராத் போலீஸார் மிகவும் கொடூரமான முறையில் திட்டமிட்டுக் கொலை செய்துள்ளனர் என சிபிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.