பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு பெருமளவிற்கு நடந்தது எந்த ஆட்சியில் தெரியுமா?
Recommended Video
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி, பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டது, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு காலகட்டத்திலா, மன்மோகன்சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலா என இரு கட்சியினரும் பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், யாருடைய ஆட்சி காலத்தில் அதிகப்படியான மோசடி நடந்துள்ளது என்பதை சிபிஐ இப்போது அம்பலப்படுத்திவிட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி என அழைக்கப்படும் இந்த ரூ.11,400 கோடி மோசடி எப்போது அரங்கேறியது என்ற தகவலை சிபிஐ இப்போது போட்டு உடைத்துள்ளது.
எப்ஐஆர்
வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நீரவ் மோடியின் உறவினர் மேகுல் சோக்சி மீது சிபிஐ சமீபத்தில் புதிய எப்ஐஆர் பதிவு செய்தது. அவரது 3 நிறுவனங்கள் மூலம் 2017-18ம் ஆண்டில் ரூ.4,886.72 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அந்த எப்.ஐ.ஆர்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில்தான், 143 கடன், உத்திரவாத கடிதங்கள்(எல்ஓயு) பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் வழங்கப்பட்டுள்ளதாம்.
முதல் எப்ஐஆர்
முன்னதாக சிபிஐ கடந்த ஜனவரி 31ம் தேதி பதிவு செய்த எப்.ஐ.ஆர்-ல் 2017ல்தான் ரூ.280.7 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும், 8 கடன் உத்தரவாத கடிதங்கள் மூலம் இது நடந்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய தகவல்கள் அடிப்படையில் ரூ.6,498 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக, இப்போது முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்டுள்ளன
அவ்வளவு ஏன், பல பழைய கடன் உத்தரவாத கடிதங்கள், கடந்த ஆண்டுதான் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்று சிபிஐ கூறியுள்ளது. 2004 முதல் 2017 வரை மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டாலும், அதில் பெரும்பாலான மோசடிகள் கடந்த ஆண்டு அரங்கேறியுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.
சிபிஐயின் புதிய எப்ஐஆரில் "குற்றம்சாட்டப்பட்ட வங்கி அதிகாரிகள் கோகுல்நாத் ஷெட்டி மற்றும் மனோஜ் காரட் ஆகியோர், குற்றம்சாட்டப்பட்ட கம்பெனி இயக்குநர்களுடன் கூட்டு சேர்ந்து 2017-18ல் ரூ.4886.72 கோடியை மோசடி செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ குற்றச்சாட்டு
எப்ஐஆரில் சோக்சி உட்பட 16 பேர் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 143 கடன் உத்தரவாத கடிதங்களை தவிர்த்து, சோக்சி 224 வெளிநாட்டு கடனுக்கான கடிதங்களையும், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் பெற்றுள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. சிபிஐ நாடு முழுக்க 26 இடங்களிலும், அமலாக்கத்துறை 35 இடங்களிலும் சோதனை நடத்தி ரூ.549 கோடி அளவுக்கான வைரம் மற்றும் நகைகளை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.