இமாச்சல் காங். முதல்வர் வீரபத்ர சிங்கை கைது செய்ய அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இமாச்சலப் பிரதேச ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வீரபத்ரசிங்கை கைது செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்துள்ளது.
2009-11ஆம் ஆண்டு காலத்தில் மத்திய அமைச்சராக வீரபத்ரசிங் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ6.10 கோடி சொத்து குவித்தார் என்பது சி.பி.ஐ. புகார். இது தொடர்பாக வீரபத்ரசிங் மற்றும் அவரது குடும்பத்தினர் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 26-ந் தேதியன்று வீரபத்ரசிங் வீடு உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு நடத்தியது. இந்த வழக்கில் வீரபத்ரசிங் உள்ளிட்டோரை சி.பி.ஐ. கைது செய்ய இமாச்சலபிரதேச உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையினர் நேற்று தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் வீரபத்ரசிங்கை கைது செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. இன்று மனுத்தாக்கல் செய்துள்ளது. இம்மனு மீது வரும் 26-ந் தேதியன்று விசாரணை நடைபெற உள்ளது.