ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் 2 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி சிபிஐ மனு
டெல்லி: மாறன் சகோதரர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியாவில் உள்ள 2 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் கைதாகமல் இருப்பதற்காக சன் குழும அதிபர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இம்மனு மீதான இன்றைய விசாரணையின் போது யாருக்கும் முன்ஜாமீன் தரக் கூடாது என்று அமலாக்கப் பிரிவு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை வரும் 27-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய விசாரணைக்காக கலாநிதி, காவேரி, தயாநிதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இதனிடையே டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று சிபிஐ ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய மேக்சிஸ் நிறுவன அதிகாரிகள் 2 பேர் 4 முறை விசாரணைக்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. ஆகையால் அவர்கள் 2 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.