இலங்கை அரசால் கைதாகிறாரா கே.பி.? ராஜிவ் கொலை பற்றி விசாரணை நடத்த சிபிஐ திட்டம்!
டெல்லி: விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்து வந்த கே.பத்மநாபனை இலங்கை கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும், எனவே இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு குறித்து அவரிடம் விசாரிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்தவர் கே.பத்மநாபன். கே.பி என்ற பெயரால் பிரபலமானவர். புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு இலங்கை அரசின் பாதுகாப்பிலுள்ளார். கழிநொச்சி பகுதியில் கே.பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சி மாற்றம்
ராஜிவ் கொலை வழக்கு தொடர்பாக கே.பியிடம் விசாரணை நடத்த சிபிஐ பலமுறை வேண்டுகோள்விடுத்தும், முந்தைய ராஜபக்சே அரசு செவிமடுக்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கே.பியை விசாரணைக்கு உட்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.
இலங்கையில் மனு
இதற்கேற்ப, கே.பியை கைது செய்யுமாறு, இலங்கையின், ஜனதா விமுக்தி கட்சி சார்பில், கொழும்பு கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கே.பியை கைது செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவிட வேண்டும் என்பது அந்த மனுவிலுள்ள கோரிக்கையாகும்.
விசாரிக்க சிபிஐ முடிவு
இதுகுறித்து 'ஒன்இந்தியாவிடம்' சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த விவகாரத்தில் கொழும்பு கோர்ட் எந்த மாதிரியான உத்தரவை பிறப்பிக்க போகிறது என்பதை கவனித்துவருகிறோம். கே.பியிடம் விசாரணை நடத்துவது குறித்து இன்டர்போல் உதவியையும் நாடியுள்ளோம்.
ராஜிவ் கொலை துப்பு
இலங்கை கே.பியை கைது செய்தால், அவரை இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்த தயாராக உள்ளோம். ராஜிவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக அவரிடமிருந்து கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
ஆயுத கொள்முதல் செய்தாரா?
விடுதலை புலிகள் இயக்கத்தில், கே.பிதான் ஆயுத கொள்முதல் பிரிவின் முக்கியஸ்தராக இருந்துள்ளார். எனவே ராஜிவ் கொலைக்கு தேவையான ஆயுதங்களையும் கே.பி கொள்முதல் செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.