கால்நடை தீவன முறைகேடு தொடர்பான 3-ஆவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை- ராஞ்சி நீதிமன்றம் அதிரடி
கால்நடை தீவன முறைகேடு தொடர்பான 3-ஆவது வழக்கிலும் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு அளித்துள்ளது.
ராஞ்சி: கால்நடை தீவனம் கொள்முதல் செய்ததில் சாய்பாஷா கருவூலத்தில் ரூ. 33.67 கோடி முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பளித்த ராஞ்சி நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையையும் விதித்தது.
பீகார் முதல்வராக லாலு பிரசாத் இருந்த போது கடந்த 1992-93-ஆம் ஆண்டு காலகட்டத்தில் மாட்டு தீவன கொள்முதல் செய்த போது ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாஷா கருவூலத்தில் ரூ. 33.67 கோடி கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ராவும் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டது. மொத்தம் 56 பேர் குற்றம்சாட்டப்பட்டனர்.
லாலு பிரசாத்
இந்நிலையில் இந்த வழக்கை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது லாலு பிரசாத்தும், ஜகன்நாத் மிஸ்ராவும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
5 ஆண்டுகள் சிறை
மாட்டு தீவன கொள்முதல் செய்ததில் முறைகேடு தொடர்பாக 3-ஆவது வழக்கிலும் லாலு குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் சிறை தண்டனை
அதேபோல் பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜகன்நாத் மிஸ்ராவுக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 2013-ஆம் ஆண்டு ரூ.37.7 கோடி கையாடல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
3.5 ஆண்டுகள் சிறை
இதையடுத்து 2-ஆவதாக கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி தியோகர் கருவூலத்தில் ரூ. 89 கோடி முறைகேடு செய்ததாக லாலுவுக்கு கடந்த 6-ஆம் தேதி 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்றைய தினம் விசாரணைக்கு வந்த மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3-ஆவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இரு வழக்கு
இந்த வழக்குகளை தவிர்த்து கடந்த 1990-களில் மாட்டு தீவனம் கொள்முதல் செய்த விவகாரத்தில் தும்கா கருவூலத்தில் ரூ.3.97 கோடியும், டோரண்டா கருவூலத்தில் ரூ.184 கோடியும் முறைகேடு செய்ததாக லாலு மீது இரு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.