நிலக்கரி மோசடி வழக்கு... மம்தாவின் நெருங்கிய உறவினருக்கு சிபிஐ சம்மன்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் நிலக்கரி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மம்தாவின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
அதேபோல மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்புடைய நிலக்கரி ஊழல், சாரதா சிட்பண்ட் ஊழல், வழக்குகளின் விசாரணைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பல முக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது புதிய ஊழல் குற்றச்சாடுகளும் எழ வாய்ப்பு உள்ளது.
சிபிஐ சம்மன்
இந்நிலையில், நிலக்கரி மோசடி தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதற்காக சிபிஐ குழு இன்று அபிஷேக் பானர்ஜியின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இருப்பினும், அங்கு அவரது அபிஷேக் பான்ரிஜியின் மனைவி ருஜிரா பானர்ஜி இல்லாததால் அங்கிருந்த ஊழியர்களிடம் சம்மனை அளித்தனர்.
குற்றச்சாட்டு என்ன
நிலக்கரியைச் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கும் மாஃபியாக்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் தலைவர்களுக்குப் பெருமளவு நிதி அளிப்பதாகப் புகார் உள்ளது. இந்த பணம் அக்கட்சியின் வினய் மிஸ்ரா மூலம் கட்சிக்குள் கொண்டு வரப்படுவதாகவும் புகார் உள்ளது. வினய் மிஸ்தா தற்போது திரணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி பிரிவின் பொதுச் செயலாளராக உள்ளார். அக்கட்சியின் இளைஞரணி தலைவராக அபிஷேக் பானர்ஜி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவு
வினய் மிஸ்ராவின் வீட்டில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பான சிபிஐ சோதனை நடத்தியது. மேலும், அவருக்கு எதிராக ஜாமீன் வெளிவர முடியாத வாரண்ட்டையும் சிபிஐ பிறப்பித்துள்ளது. தற்போது வினய் மிஸ்ரா தலைமறைவாக உள்ளார். இதற்கிடையே, கடந்த இரு நாட்களாக இந்த வழக்கு தொடர்பாக புரூலியா, பாங்குரா, புர்துவான், கொல்கத்தா உள்பட 13 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அஞ்ச மாட்டோம்
இது குறித்து அபிஷேக் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "சட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இதுபோன்ற சூழ்ச்சிகள் மூலம் அவர்கள் நம்மை அச்சுறுத்த முடியும் என்று நினைத்தால் அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.